கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவுக்கு அத்தியாவசியமான மருத்துவ சாதனங்களை CDB அன்பளிப்பு

  • கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு எதிரான போராட்டத்துக்காக ரூ. 10 மில். பெறுமதியான வென்டிலேற்றர்கள், கண்காணிப்பு கருவிகள் மற்றும் இதர சாதனங்கள் வழங்கல்

கொழும்பு, ஜுன் 2021 – இலங்கையில் நிலைபேறாண்மையை மேம்படுத்துகின்றமைக்காக சிறந்த பத்து கூட்டாண்மை குடிமகன் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB), கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அவசரத் தேவையாக அமைந்துள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான ரூ. 10 மில்லியன் பெறுமதியான வென்டிலேற்றர்கள் கண்காணிப்புக் கருவிகள் மற்றும் இதர மருத்துவ சாதனங்களை வழங்கியிருந்தது.

சமூகப் பொறுப்புணர்வு வாய்ந்த செயற்பாடுகளுக்கு முக்கியத்துவமளித்து தனது வியாபார தந்திரோபாயங்களை செயலாற்றும் CDB, முன்னணி கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில், தேசத்தின் நலனுக்கு பங்களிப்பு வழங்க முன்வந்திருந்தது. கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மருத்துவ சாதனங்களுக்கான தேவை தொடர்பில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர். பிரியந்த இல்லேபெரும முன்வைத்திருந்த அவசர கோரிக்கையை கவனத்தில் கொண்டு உடனடியாக இந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க CDB முன்வந்திருந்தது. நிறுவனத்தினால் வழங்கப்பட்ட மருத்துவ சாதனங்களில் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான syringe pumps, infusion pumps, Multipara monitors மற்றும் Modified Scuba diving masks போன்றன அடங்கியிருந்தன.

இலங்கையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் நிலையமொன்றை நிறுவுவதற்கு கடந்த ஆண்டில் ரூ. 10 மில்லியனை CDB நன்கொடையாக வழங்கியிருந்தது. கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைமை அதிகாரியான இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் இந்த நிதி வழங்கப்பட்டிருந்தது.

தொற்றுப் பரவல் ஆரம்பித்தது முதல், சமூகத்தின் நலனில் CDB தொடர்ச்சியாக கவனம் செலுத்தியிருந்ததுடன், இதன் தாக்கம் வியாபாரத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல என்பதை உணர்ந்திருந்தது. நிறுவனத்தினால் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுத் தேசிய திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டதுடன், கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு எதிரான தேசிய போராட்டத்துக்கு அவசியமான நிதிப் பங்களிப்பையும் வழங்கியிருந்தது. இதற்கு மேலாக, ஒவ்வொரு கிளையினூடாகவும், அவை இயங்கும் பிரதேசத்தில் காணப்படும் மிகவும் பின்தங்கிய குடும்பங்களை இனங்கண்டு, அவர்களுக்கு அவசியமான அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தது.